Thursday, August 18, 2016

என்ன தவம் செய்தனோ !


எங்கோ இருக்கும் மரத்தில் ,
எப்படியோ கனிந்த கனி கொத்தி ,
எப் பறவையோ தின்று
    போட்ட விதை போல் நான் . . .

கல்லின் மேல் விழுந்திருந்தால்
 காய்ந்து கிடந்தே கருகியிருப்பேன் . . .

கள்ளி செடிக்குள் விழுந்திருந்தால்
 கண் திறப்பது கூட சந்தேகம் தான்  . . .

புல் வெளியாய் நீ தாங்கி இருக்க
புளிய மரமாய் இன்று நானிருக்கேன் . . .

தொப்புள் கொடி உறவெனில்
தமயன் என்பதாய் இருந்திருப்பாய் !

 இரத்த பாசம் உன்னோடு எனில்
  அங்காளியோ , பங்காளியோ ஆகி இருப்பாய் !

தூரத்து சொந்தமோ , தாரத்தின் சொந்தமோ,
எதோ ஓர் உறவாய் இருந்திருப்பாய் !

ஏதும் அற்ற உறவிருந்தும் ,
 எதற்க்காக என்னோடு நீ ?

சொந்தங்கள் சேர்ந்து விடும்
   செல்வங்களை பார்த்ததும் !
பந்தங்கள் பரவி விடும்
  பதவிகள் பார்த்ததும் !

பரிதவித்து நான் நின்ற போது,
பக்கத்தில் நீ மட்டும் தானடா !

 எதற்க்காக என்னோடு நீ ?

நான் அழ பிறர் சிரிக்கையில்,
நான் வீழ பலர் நினைக்கையில்

தோள் கொடுத்தவனும்
தூக்கி விட்டவனும் நீ ஒருவன் தானடா !

கர்ணன் நட்பு கூட
   கடன் தீர்க்க தானே !
செஞ்சோற்று கடன் தீர்க்க தானே !

காட்டிய அன்பிலும் ,
ஊட்டிய நட்பிலும்

கர்ணனுக்கும் மேல் நீ - எனக்கு
 கண்ணனுக்கும் மேல் நீ ! !