Thursday, November 30, 2017

வள்ளல்

             
அண்டத்தின் அப்பன் 
ஆதவன் அனல லைகளால்

அகிலத்தின் அரசிகள்  
ஏரி கடல் ஆறு புனலோடு

காம கதிர்கள் கொண்டு 
களியாட்டம் அதன்மேல் ஆடி 

காம கதிர்கள் கொண்டு 
களியாட்டம் அதன்மேல் ஆடி 

கருவுற செய்து வானில் 
கருநீல கருவறை அமைத்து 

குறுமாக்கள் உருவாக்கி 
குட்டி குட்டியாய் பெற்றெடுத்து 

தவழ்ந்தாட  அனுப்புகிறான் 
தரணிக்கு தொடர்ச்சியாய் 

கெடுத்ததில்லை இதுவரை 
கொடுப்பவரே வெய்யோன் மக்கள் 

கர்ணன் மட்டுமன்றி 
கார்மேக துளிகளும் தான் 

அள்ளி கொடுப்பதில் 
அவர்களுக்கும் தான் ஈடுண்டோ ?

குறிஞ்சி குன்றுகளில் ஏறி 
குதித்தாடும் அருவியாய் ஆட 

முல்லை மலர்களில் மறைந்து
ஒளிந்தாடும் ஓடையை ஓட 

மருத மண்ணில் விழுந்து
மின்னும் மணிகளாய் மாற  

நெய்தலோடு நிறுத்தி கொண்ட 
நிலைப்பாடு தான் என்னவோ 

பார்க்காத இடங்கள் எல்லாம் 
பாலையாய் மாறி தான் போனதோ 

வஞ்சனை இன்றி 
வந்து போகும் அன்னையே 

வணங்குவோம் எங்களை 
வாழவைக்கும் உன்னையே 



Saturday, September 23, 2017

ஈடுண்டோ . . .!


பயம் கலந்த பக்தியோடு
 பக்தன் ஒருவன் வேண்டினான் தினமும் . . .

தாகமென்று வேண்டினான், 
 தாய்ப்பால் கிடைக்க செய்தேன் !

தலை கோத விரல்கள் கேட்டான் 
 தாய் மடி பரிசளித்தேன் !

பசி என்று வேண்டினான்
 பால் சோறு ஊட்ட வைத்தேன் !

படிப்பறிவு வேண்டி நின்றான்
  பாடசாலை செல்ல வைத்தேன் !

பட்ட மேற்படிப்பு கேட்டான்
  பகுத்தறிவும் புகுத்தி வைத்தேன் !

படிப்புக்கேற்ற வேலை வேண்ட 
 மடி கணினியோடு பணி கிடைக்க செய்தேன் !

வசதியாய் வாழ்க்கை விரும்ப
  வங்கி கணக்குகளில் கோடியை நிரப்பினேன் !

தூர தேசம் தீராத ஆசை என்றான்
  தாரமும் தந்து, தூரமாய் அனுப்பினேன் !

அவனுக்காக , ஆசை தீர
 அனைத்தையும் வேண்டிக்கொண்ட அவன் ,

அவனுக்காய் வாழ்ந்தவளின்
 ஆயுளை இதுவரை  கேட்டதில்லை !

குறைந்த பட்ச வேண்டுதலில்
அன்னை ஆயுள் அடங்கியிருந்தால் ,

குமுறி அழும் நிலையை மாற்றி
  கூட்டியிருப்பேன் அவள் நாட்களை !

சவமாய் சாய்ந்து கிடக்கும்
 அன்னை பாதம் கட்டிக்கொண்டு,

சபிக்கிறான் என்னை கடவுளா
  நீ என்று . . .!

அருகில் ஆன்மாவை அமர்ந்து
   அவள்  இன்னும்  வேண்டுகிறாள்,

 மகனின் ஆயுள்  மட்டும்  . . .



Tuesday, May 30, 2017

பிரிந்துவிடு என் பிரிவே !



 வாழ் நாள் அறிந்திடாத - இதுவரை
வாழ்க்கையில் கிடைத்திடாத,

கொடுமை, நீ இல்லா இத் தனிமை !

தனிமையிடம் என்னை
  தனியாய் விடும்படி கேட்டேன்,
அறிந்திடாத வலியை எனக்கு
 அறிமுக படுத்தி  சென்றது  . . .

அருகில் இருக்கும் வரை  - எனை
 ஆட்கொள்ள முடியவில்லை போலும் ,
தூரமாய் நீ சென்றதும் - என்னை
  துளையிட ஆரம்பித்தது மெதுவாய் . . .

நிதர்சனம் எது வென்று
நினைவுக்கு தெரிய வில்லை !
அவளோடு செலவிட்ட அந்நாட்களா ?
அவளின்றி இருண்டிருக்கும் இந்நாட்களா !

நிதானம் இழக்கவில்லை
 நான்  இன்னும் ,
நிலவோடு கழிந்த என்
 நாழிகைகள் தான் உண்மை !

கண்ணில் பட்ட யாவும்
 கன்னியையே ஞாபக படுத்த,
கண்களின் ஓரங்களில் கசிந்து
கால்வாய் ஒன்று ஓடியது . . .

தண்ணீரில் ஒரு மீன்
 தன் துணை இழந்து,
கண்ணீர் கண்களுடன்
  கரை ஒதுங்கி நிற்க !

கிளையில் துணையின்றி
 கிளி ஒன்று அமர்ந்து,
கவலை பொங்கிட
 காதல் ராகம் இசைக்க !

இது போல் இல்லை
 இது நாள் வரை . . .

கருகிய பூக்கள் மட்டும் - என்
 கண்ணுக்கு தெரிவது ஏனோ?

வாடை காற்று என்
 வலியினை ஆற்றாதது ஏனோ?

ஓடிய மேகங்கள் எல்லாம்
வாடிய தேகங்களாய் ஏனோ?

மெல்லிய இசை கூட
முள் குத்துவதுபோல் ஏனோ?

இயற்கை அனைத்தும்
இடம் மாறியது ஏனோ?

இது போல் இல்லை
 இது நாள் வரை . . .

தூரத்தில் நீ இருப்பதால்
தொலைந்து போனது என் அத்தனையும் !

அருகில் வந்துவிடு - இல்லை
அரளி விதை அனுப்பிவிடு . . .

Monday, April 3, 2017

நான் மரம் பேசுகிறேன் . . .


ஆண்டவனால் அவனியில்
  அவதரித்தோமோ ?
பரிணாமத்தால் பாரில்
  மாற்றம் பெற்றோமோ ?

படும் இன்னல்களோ
  பல ஆயிரங்கள் தாண்டும் . . .

ஒதுங்கி ஓரமாய் நிற்கும் - என்னை
  உரசி போகும் மாடுகளுக்கும்
சல்லாப சிந்தனை கொண்டு -அவளை
  சரசம் ஆடும் ஆண்களுக்கும்  . . .

பேதம் ஒன்றும்
  பெரிதாக இல்லை . . .

கொத்தும், குலையுமான என் கனிகளை
  கொத்தி போகும் காக்கைகளுக்கும்,
குற்றுயிரும் குலையுயிருமாய் - அவள்
  கற்பு கொத்தும் காளைகளுக்கும் . . .

பேதம் ஒன்றும்
   பெரிதாக இல்லை  . . .

போகிற போக்கில் கிள்ளப்படும்
   என் இலைகள் போல்தானோ!
பார்க்கிற பார்வையில் பந்தாடும்
  அவள் இடையின் நிலை !

பேதம் ஒன்றும்
   பெரிதாக இல்லை  . . .

பழகிய தென்றல் தானே !
 பலமுறை தீண்டி செல்லும்,
தடையின்றி தலை சாய்த்தேன்
 கிழித்து சென்றது சூறாவளியாய்

பழகிய சுற்றம் தானே !
 பண்போடு நடந்து கொள்ளும்,
விரல் கோத தலை சாய்த்தாள் - அவள்
 சேலையை விளக்கியது மற்றோரு விரல் . . .

பேதம் ஒன்றும்
   பெரிதாக இல்லை  . . .

நிழல் தேடி என்
 கிளை நாடும் பட்சிகள் - இறுதியில்
மலம் கழித்து
 மயிர் எறிந்து செல்லும்

மனம் தேடி அவள்
 குணம் நாடும் ஆண்மை  - இறுதியில்
மடி தேடி
 மஞ்சம் தேடும்

பேதம் ஒன்றும்
   பெரிதாக இல்லை  . . .

கஷ்டங்களும் காயங்களும்
 ஒன்று போல் இருப்பினும்,
அறிவிலும் ஆற்றலிலும்
ஆறு, ஆயிரம் மடங்கு உயரியவள்  !

வெறும் கட்டையாய் நீ எனில்
 வேரறுப்பது பரிட்சயம் ,
பெரும் காட்டை அளிக்கும் தீ எனில்
 புது யுகம் நிச்சயம் !

மரமாய் நான் நிற்பது
 இயற்க்கையின் விதி !
மரம் போல் உனை வைப்பது
 மா க்களின் சதி !

வேரூன்று !
அசையா அளவு வேரூன்று !

கிளை பரப்பு !
கீழ் விலா அளவு கிளை பரப்பு !

மரமாக அல்ல
 மகா சக்தியாக !



  

Friday, March 24, 2017

சுடச்சுட . . .



நாளிதழ் பிரிந்து
  சேரும் முறையாய் கையில்,
நாவிதழ் பிரிந்து சேரும் 
    முறை வேண்டும் நம்மில் . . .

தினம் சில புத்தம்
  புது செய்திகளும்  ,
சில நேரம் முந்நாளின்
  தொடர் நிகழ்வுகளும்  . . .

அணி விளம்பரங்கள்
   அழகாய் அகற்ற பட்டு   ,
ஆடை அறிவிப்புகள்
 ஆங்காங்கே விலக்கப்பட்டு. . .

ஆரம்ப ஏடுகள் சில
 ஆடுகள செய்திகளோடும் ,
ப(பி)ண்டம் மாற்றும் முறை
 வணிக வரிகளாய் தொடர . . .

முடிந்தது ஏடு வானிலை
 அறிக்கையோடு,
மூச்சின் வெது வெதுப்போடு
மிதமான மழை இன்று . . .
   

Tuesday, March 21, 2017

அழகிய தமிழ் மகன் . . .


கவிதை போல் திருநாமம் 
  கார்த்திகேயா அழகன்றோ !
கண்டவுடன் பக்தி தூண்டும் 
 கடவுள் நீ அழகன்றோ !

நெளிநெளி யாய் சிகை கொண்ட 
  நேசமணி அழகன்றோ !
குவளை மலர் கண்கள் உனது 
  குளிர்ச்சியூட்டும் அழகன்றோ !

பிறை நுதல் கொண்ட நீர் 
  பொட்டோடு அழகன்றோ !
முறை கொண்ட முகம் உனது 
  பட்டு போன்ற அழகன்றோ !

கடுக்கன் அணி கோர்த்த 
  காது மடல் அழகன்றோ !
இடுக்கண் கலைத்தாடும் - உன் 
  இறையருள் அழகன்றோ !

அரச கோலம் காணுகையில்
  அதிகார அழகன்றோ !
ஆண்டி கோலம் நிற்க காண
  கோடி கண்கள் போதாதன்றோ !

சங்கத் தமிழ் சாற்றுகையில்
  சப்தம் எல்லாம் அழகன்றோ !
சரித்திர நாயகன் நீ
  சாதித்தவை கொஞ்சமன்றோ !

பிறப் பழகு
  பிஞ்சு மொழியழகு
முருகன் பெயரழகு
   ஆணில் நீ பேரழகு  !

வலக்கை வேலழகு ,
 இடக்கை கொடியழகு !
வணங்கி உனை பாடுகையில்
 வாசம் பொங்கும் என் அலகு !

வாகன மயிலழகு
  வானை தொடும் புகழ் அழகு  !
வாஞ்சை கொண்டு வணங்குவோர்க்கு
  சொர்க்கம் இந்த மண்ணுலகு !

ஆறுபடை வீடு கொண்டாய்
  நூறு படை போரில் கொண்டாய்!
ஆணவம் கொண்டதால் தானோ
  ஆத்திரத்தில் அசுரனை கொன்றாய் !

ஓங்காரம் ஒன்று போதும்
  ஆங்காரம் அழிந்து போகும் !
ஓங்கி விழும் தீமை யாவும்
  தாங்கி விழும் உன் அருளால் !

துதி பாட துதி பாட
 தூர் எடுக்கும் வரிகள் தந்து
பதி பாட பக்தி பாட
சொல் தந்த தமிழை வணங்கி

என் சிரம் தாழ்த்துகிறேன்- தலைவா
 உன் தாள் பணிந்து . . .

அல்லல் போக்கும் நாயகனே ! - என்றும்
அழகிய தமிழ் மகன் நீயே!