Sunday, December 21, 2014

தாகம் தணிந்ததா தாலிபான்களே . . . ?


 




அரை குறை தூக்கத்தில் எழுந்து , 
   அழுதுகொண்டே ஆடைகளை உடுத்தி 
அரக்க பறக்க ஆகாரம் கொண்டு 
   அவசரமாய் அள்ளி முடித்து, சீவி 
அன்றாடமாய் எனக்கு ஆரம்பித்த அந்த நாள் . . . 

அப்பாவின் முத்தத்தோடும்
   அண்ணனின் சண்டையோடும், 
தாத்தாவின் சிரிப்போடும் 
   பாட்டியின் பாசத்தோடும் 
அன்றாடமாய் பள்ளிக்குப்  புறப்பட்ட அந்த நாள் . . . 

தாய் கை பிடித்துத்  தொங்கி 
  தாழ்வாரம் தாண்டிக்  குதித்து 
வாசல் நின்று சைகை செய்து 
  வருகிறேன் என்று சொல்லி 
வழக்கமான சிரிப்போடு வேனில் ஏறிய அந்த நாள் . . .

இருக்கையில் அமர்ந்து இயற்கையை பார்த்தபடி 
 இசைபோல் நகரும் மரங்களை ரசித்தபடி 
நண்பன் கொடுத்த பழத்தினை ருசித்தபடி 
 படிக்க நினைக்கும் பாடத்தை வெறுத்தபடி 
பள்ளியில் இறங்கிய அந்த நாள் . . . 

அதே கூச்சலோடும் ,கொன்டாட்டத்தோடும்  -  ஆசிரியரின்
   அதட்டலோடும், மிரட்டலோடும் 
அழகாய் தான் நகர்ந்தன நேரங்கள் . . .  

பத்து மணி வரை . . . 

அப்பாவின் ஆடை போல் அணிந்து 
     ஆறு பேர் வந்தனர் விரைந்து 
கண்களில் ஆத்திரத்தோடும் 
      கைகளில் ஆயுதங்களோடும் . . . 

அன்பாய் தான் சிரித்தேன் நானும்  
  அதற்கு ஏன் சுட்டனர் , விடையில்லை ?
பழம் கொடுத்த நண்பன் இருந்தான் 
  பார்பதற்குள் படுத்து விட்டான்  பக்கத்தில் . . .

நெற்றி பொட்டில் அவனுக்கு ஏனோ 
  பொட்டு வைத்தனர் தோட்டா கொண்டு 
எழுப்பிப் பார்த்தேன் எழுவான் என்று 
  படுத்தவன் விளையாட்டாய்  படுத்தால் தானே . . . ?

ஆசிரியர் மிரட்டினால்  - நீர் 
  அப்படியே போய்விடும் எனக்கு, 
அடிப்பதை விடுத்தனர் அவர்களும் 
  அப்படியே விட்டு விடுவார்களா  இவர்களும்  . . . ?

அப்பாவை கூப்பிட்டுப்  பார்த்தேன் 
  அம்மாவையும் கூப்பிட்டுப்  பார்த்தேன்  - அழுகையோடு 
ஆசானைக்  கூப்பிட்டுப் பார்த்தேன் - இறுதியில் 
  ஆண்டவனை கும்பிட்டும் பார்த்தேன் . . . 

பதறியும் பலனில்லை , 
  கதறியும் கருணையில்லை. . .

 இதோ விழுந்துவிட்டேன் . . . 

விழுகையில் எனக்கு சிந்தனை  ஒன்றே 
    எதற்கு சுட்டனர் எங்களை என்று  . . . ??

ஆசிரியர் அவர்களை அடிதிருப்பரோ ?
    அண்ணன் ஒரு வேலை கிள்ளியிருப்பானோ ?
கொடுக்காமல் தின்ன கொய்யாவிற்க்காகவோ ?  - என் 
    இரவு அழுகை அவர்களை எழுப்பியிருக்குமோ ?

எதற்காக ????????

Friday, July 18, 2014

காதல் (பாகம் - II). . . ஞாபகம் வருதே ! ! !


  
ஞாபகம் வருதே !



நாதாங்கி கதவ சாத்தி  
  நாலாபுறமும் பார்வைய சுழட்டி
ஆத்தாள கூப்பிடும் சாக்குல
  ஆத்துபுறம் போறத சொன்ன  . . . 

கஞ்சியிலே பொதஞ்ச சோற 
  கைவெரலால் பெசஞ்சு கரைக்க 
காதல் கொண்ட சோறும்நீரும் 
   கரைஞ்சி கழனி நீரா ஆச்சே . . . 

ஆன நீரும் பானை சுத்த 
  அள்ளி குடிக்க கையில் எடுக்க 
வாசபுறம்  அழைச்ச குர
  அவதானே சித்தம் சொல்ல . . . 

பசி போன எடமும் தெரியல 
  பானை போன தடமும் தெரியல 
கை கழுவவும் மனசுக்கு தோனல 
  கால்கள் போகும் வேகமும் புரியல . . . 

சோத்து பானை தலையிலாட 
  சேர்ந்த மூடி சலங்கயாட 
தண்ணீ கொடம் இடுப்பிலாட 
  கூந்தல் குஞ்சம் கொசுவமாட  . . . 

பின்னால வந்தவன் என்னை,
  கண்ணால கூப்பிட நீயும்
முன்னால போகிற  போக்குல  - உன் 
  முடி வாசம் தீண்டிச்சி  மெதுவா . . . 

அறியாம எனையும் நானே 
   தறிகெட்ட ஆறாய் ஆனேன் 
பொறி தொட்ட எலியா துடிச்சி 
    புள்ளரிச்சு பூத்து போனேன் . . . 

சொட்டும் நீரா தாவணி சரிய
  பட்டுவிடாம பாவாடை இருக்க
இடுக்கில் பார்த்த இடமது இழுக்க
  இடுப்பை கண்டு நான் ஏக்கமாய் சிரிக்க  . . .

அழகாய் கோபம் நீ மூக்கினில் காட்ட 
   அதற்குள் தாவணி அழகினை மூட 
பேசி ,சிரிச்சி போனது இருக்கே 
  அன்பே அது உனக்கு ஞாபகம் இருக்கா . . . ?

சோடிக்  கிளி கொஞ்சியத பார்த்து 
  காட்டு புறாக் காதலை பார்த்து 
அக்கம் பக்கம் ஆளுங்களை பார்த்து -  அன்பே  
   அங்கம் தொட்டது ஞாபகம் இருக்கா ? 
  
கருக்கருவா கருத பார்த்து 
  கட்டியணச்சி அறுத்தது போல 
வரப்போரம் வந்தவ உன்னை
  வாரி அணைச்சது ஞாபகம் இருக்கா ?

வெக்கமும் , பயமும் சேர்ந்து வந்ததும் 
   வெடுக்குனு என்னை நீ தள்ளி விட்டதும் 
அம்மானு அலறி நான் வாரில விழுந்ததும் 
 சத்தம் அடக்க நீ எம்மேல சரிஞ்சதும் 


உயிரே , உனக்கு ஞாபகம் இருக்கா ?

                                             --- தொடரும் இக்காதல் III - ஆம் பாகத்தில்

உண்மைக்காதல் . . உண்மையில்லா காதலி . .




காதலுக்குக் காரணம் தேவையில்லை  - இருந்தால் 
அது தேவையே அன்றி காதல் இல்லை  . . 

கழண்டு கொள்வதற்கு காரணம் சொன்னாயே,
கலியுகத்தில் இதுபோல் கண்டதில்லை எங்கும் ! ! !

எவளோ விளக்கி சொன்னாளாம் வாழ்கையை 
இவளோ விலகி சென்றாளாம் காதலை ! ! !

எவனோ கலங்கி நின்றானாம்  - ஆகையால் 
இவள் கலக்கம் துடைதாலாம்  ! ! !

காதல் முறிக்க கண்டதில்லை ஒரு 
காரணம் இதுபோல் ! ! !

பொழுதுபோக்காகவா காதல் செய்தேன் -  என்
பொழுது முழுதும் நீயென கொண்டேன் ! ! !

வெட்கி போகிறேன் உனை விலகுவதால் அல்ல
வெகு காலம் விரும்பியதால் உன்னை  . . . 

கண்டு ரசித்த கண்களும் வேண்டாம் 
கட்டியணைத்த கைகளும் வேண்டாம் 

உண்மையாய் உயிரில் கலந்த காதல்  - கொண்ட 
உள்ளமும் எனக்கு கொஞ்சமும் வேண்டாம் . . . 

கூறிய எதுவும் இனி வேண்டாம் எனக்கு  - இருந்தால் 
அது காதலின் புனிதம் கெடுத்திடும் பிணக்கு  . . . 

இது போல் ஒரு உன்னத காதலை 
இனியும் இவ்வுலகம் காண வேண்டாம்!!


Thursday, May 22, 2014

ஒப்பனைகளின் ஒப்புகை . . .


கவிதை
           உன்  பெயரை உச்சரிக்கும் போது
                 உள்ளூர நான் உணர்வது . . .

சிற்பம் ,
           உன் உருவ நிழல் கூட
                 நிலத்தில் சாய ரசித்தது . . . 

ஓவியம் ,
          உயிர் கொடுக்கும்  தூரிகை  வணங்கி 
                 வாழ்த்தொன்று  வரைந்து கொண்டது  . . .

இம்மூன்றும் உன்னோடு ஒப்பிட 
        இன்று மட்டுமே !

நாளை வேறு என்னவோ !

ஒவ்வொரு நாளும் உன்னோடு
      ஒப்பிடும்  சாக்கில் அவையவை 

தன்னை அழகுபடுத்தி கொள்கிறது ! 

Friday, May 16, 2014

சதி . . .




தந்திரக்காரர்கள் கவிஞர்கள் ! !

எங்கே கவிதை வம்சம் 
       கரு அற்று போகுமோ என பயந்து 


"காதலித்துப் பார்க்க சொல்கிறார்கள் ! ! !"




Wednesday, May 14, 2014

அறிவொளி . . . !



படிப்பறியா தாய்க்கு - பள்ளி 
  சென்று வந்த குழந்தை 
எழுத கற்று கொடுத்தது   

   "பாப்பா" என்று . . .  

Friday, April 4, 2014

நாகரிகம் . . .




ஈன்ற குட்டிகளை விட்டு 
     தூர படுப்பதும் , 
தூக்குபவர்  தூக்க 
        பார்த்து கொண்டிருப்பதும் 
நகரத்து மாடி வீட்டின் 
        நாய்களிடம் கூட சாத்தியமே  . . . 

Friday, March 28, 2014

வித்தகி . . .









ஒரே செடியில் தான் மலர்ந்தது 
      ஒரே நாரில் தான் தொடுக்கப்பட்டது !

ஒரே கூடையில் தான் அமர்ந்து சென்றது 
        ஒரே கையால் தான் அளக்கவும் பெற்றது !

ஒரே இலைக்குள் தான் சுருடவும் பட்டது 
       ஒருவனிடம் தான் விலையும் போனது  . . .! 

முதல் இரண்டு முழம் சாமிக்கும் 
          அடுத்த இரண்டு முழம் மனைவிக்கும் என 
முறையாய் தான் முழம் அளந்தும் அளிக்கப்பட்டது . . .

அப்படி இருக்க !

ஒரு சேர பக்தியையும் , காதலையும் பரிவர்த்தனை செய்ய . . .
எப்படி முடிந்தது மல்லிகையால் ?







Thursday, March 20, 2014

நிறை . . .




கட்டி அணைத்து, கால்கள் பிண்ணி 
       கழுத்தை கவ்வி, மார்பால் மோதி 

இடையை வருடி, இதழை ருசித்து 
     ஈரப்படுத்திவியர்வையில் குளித்தும் 

   முற்று பெறா என் காதல்  . . . !

விரல் எடுத்து, வெட்கம் குழைத்து 
   இதழ் நிறுத்தி , இதமாய் என் கையில் 

அவள் கொடுத்த ஓர் 

     முத்தத்தில் முற்று பெற்றது ! ! ! !

Monday, March 17, 2014

முதிர்க்கன்னி




கருப்பு கவர்வதுஉம் 
                வெள்ளை விளக்குவதுஉம் 
கால அறிவியலின் 
                கணக்குப்படி தான் எனில் . . . 

கருப்பாய் இருந்தும் (இருப்பதால்அவள் 

                கவரமுடியாமல் போனதெப்படி ?

Thursday, February 6, 2014

அன்புள்ள அம்மாவுக்கு . . .

ஒரு ஏழை தன் தாய்க்கு எழுதும் கடிதம் . . . 



அன்புள்ள அம்மாவுக்கு ,

        நல்லா இருப்பனு நம்புறேன் ! 

கோடை காலம் முடிஞ்சிருச்சி 
         பருவமழை தொடங்கிருச்சி 
பார்த்து இருந்துக்கம்மா 
         பழையசோறு விட்டுரும்மா  . . .

கிலோ ஒரு ரூபாய்க்கு 
         கெடைக்குதுன்னு நெனைக்காத 
 ரேஷன் கடை அரிசி வச்சி 
          ஓன் வயித்த கழுவாத  . . . 

வாய்வு ஏறிடும் 
        வயிறெல்லாம் வீங்கிவிடும் 
  கால் கை இழுத்துகிடும் 
         கண்ணெல்லாம் மங்கிவிடும் . . . 

மாசம் மொத வாரம் 
     வந்துடும் என் ஊதியமும் 
ஆழாக்கு அரிசி வாங்கி  
     அடுப்பெரிச்சி சாப்பிடும்மா . . . 

முந்தானை கிழிஞ்ச சேலை 
      தலை தொடைக்க வச்சிக்கோ 
முறையா கட்ட ஒரு 
      பருத்தி சேலை எடுத்துக்கோ . . .


கீத்து கிளிஞ்சிருக்குமே - கொண்ட 
     கம்பும் மச்சிருக்குமே 
ஓலை ஒடுக்கிவிட்ட பாலை 
      நாறும்  அருந்திருக்குமே . . . 

ஓட்டை ஒடிசலிலே ஒழுகி 
     மழை ஊத்துசின்னா 
கடனா கீத்து வாங்கி - கம்புல 
      சும்மா சொருவிடும்மா . . . 
அடுத்த மாசம் எப்படியும் 
      அதுக்கும் சேர்த்து அனுபுச்சிடுவேன் . . . 

வயக்காடு வச்சவனேல்லாம் 
    மழை பேய தவமிருப்பான் 
நாம நனைவோமுனு 
    நாவிட்டு சபிச்சிராத . . . 

தூறல் விழுந்தாக்க 
    தொவட்டிக்கமா துணி எடுத்து 
சாரல் வரும் நேரம் கதவை 
   சாத்திக்கமா சாக்கெடுத்து 

மொழுகி வச்ச திண்ணையெல்லாம் 
   மொதிச்சி போகும்  தண்ணி பட்டா 
பொடலை மட்ட கட்ட வச்ச 
    படுதா போட்டு மூடிக்கமா . . . 

ஒத்தையா பெத்த புள்ள 
   உனை பிரிஞ்சி வாழ்ந்தாலும் 
உன்னையே நெனச்சிருப்பேன் 
    உனக்காகவே வாழ்ந்திருப்பேன் . . .

கஷ்டம் ஏதும் எனக்கில்லை - உன்னை 
    கவனிக்கத்தான் ஆளில்லை 
காலம் நேரம் கூடுமம்மா - நாம 
    கஷ்டமெல்லாம் போகுமம்மா 

பார்த்து இருந்துக்கமா . . .

---இப்படிக்கு 

உன் அன்பு மகன் குபேரன்