சித்திரையில் ஒரு நாள்
சில்லென்று காற்று வீச
திரண்டு நின்றது மேகம்
திறந்து கொண்டது வானம் . . .
பருவம் எய்யப் பார்த்திருக்கும்
பாவையின் பால் கனியாய்
முளைத்து நின்ற வித்தின்,
உச்சியில் முத்தான முதல் துளி . . .
முளைத்து நின்ற வித்தின்,
உச்சியில் முத்தான முதல் துளி . . .
கால்களின் ஊடே ஓடும் நீர்
ஒருவேளை கர்வம் கொண்டதோ ?
ஆகட்டும்,
மறுபடியும் என் கால்களின் இடுக்கில் - நீ
மன்னிப்புகோரி நிற்கத்தான் வேண்டும் . . .
முளை தட்டிய பயிரின் கோபம் !
************************************************
பச்சையம் யாவும் - இன்று
பழுப்பாய் போனது எதனால் ?
குடித்து மகிழ நீர் வேண்டும்
கூடி மகிழ காற்று வேண்டும் . . .
பகலவன் பார்வையில் நெருப்பிருந்தும் - எனை
பார்வையில் அவனே ரசிக்க வேண்டும் . . .
கொட்டிய நீரில் கழிவினை கழுவும்
முற்றிய இலையின் புலம்பல் கேட்டு
மூன்று நாளுக்கு முன்பு தளிர்ந்த
கிளையின் கொழுந்து வியந்தது கண்டு . . .
தூசியும் துரும்பும் மாற்றிய பழுப்பை
துடைத்தது எவரின் கரங்கள் இன்று . . .
சிறு கொழுந்தின் வியப்பு !
*********************************************
*********************************************
இப்படியாக . . . . . ,
பங்குனியில் கண்விழித்த நாய் குட்டி
பத்து நாள் முன் ஓடுடைத்த பருந்துக்குஞ்சு
நேற்று காலை வெயில் பார்த்த கூட்டுப்புழு
நெய்தலின் கரையாடும் சின்னஞ்சிறு நண்டு
திக்கி திகைக்கும் இவையாவுக்கும்
என்ன சொல்லி புரியவைக்க . . .
இது தான் மழை என்று . . . !

No comments:
Post a Comment