Thursday, November 21, 2019

கோடை மழை ! ! !


சித்திரையில் ஒரு நாள்
   சில்லென்று காற்று வீச 
திரண்டு நின்றது மேகம் 
   திறந்து கொண்டது வானம் . . . 

பருவம் எய்யப் பார்த்திருக்கும்
  பாவையின்  பால் கனியாய்  
முளைத்து நின்ற வித்தின், 
 உச்சியில் முத்தான முதல் துளி  . . . 

கால்களின் ஊடே ஓடும் நீர் 
 ஒருவேளை கர்வம் கொண்டதோ ?

ஆகட்டும்

மறுபடியும் என் கால்களின் இடுக்கில் - நீ 
  மன்னிப்புகோரி நிற்கத்தான் வேண்டும் . . . 

முளை தட்டிய பயிரின் கோபம் !

************************************************

பச்சையம் யாவும் - இன்று 
    பழுப்பாய் போனது எதனால் ?

குடித்து மகிழ நீர் வேண்டும் 
  கூடி மகிழ காற்று வேண்டும் . . . 
பகலவன் பார்வையில் நெருப்பிருந்தும்  - எனை 
  பார்வையில் அவனே ரசிக்க வேண்டும் . . . 

கொட்டிய  நீரில் கழிவினை கழுவும்
 முற்றிய இலையின் புலம்பல் கேட்டு 
மூன்று நாளுக்கு முன்பு தளிர்ந்த  
  கிளையின் கொழுந்து வியந்தது கண்டு  . . .

தூசியும் துரும்பும் மாற்றிய பழுப்பை 
  துடைத்தது  எவரின் கரங்கள் இன்று . . . 
   
சிறு கொழுந்தின் வியப்பு !

*********************************************

இப்படியாக  . . . . . , 

பங்குனியில் கண்விழித்த நாய் குட்டி 
   பத்து நாள் முன் ஓடுடைத்த பருந்துக்குஞ்சு 

நேற்று காலை வெயில் பார்த்த கூட்டுப்புழு 
  நெய்தலின் கரையாடும் சின்னஞ்சிறு நண்டு 

திக்கி திகைக்கும் இவையாவுக்கும் 
 என்ன சொல்லி புரியவைக்க . . . 

இது தான் மழை என்று . . . !

No comments: