Thursday, November 21, 2019

காதல் (பாகம் - I ) . . . அறியாக் காதல்


 பரட்டை முடியாடும் பாதி
     முடி காத்தாடும் 
அள்ளி சொருகயில - அதுல 
   நாலு வீழ்ந்தாடும்  . . .

மூக்குல நீர் ஒழுகும் - முடி 
   தாண்டி எண்ணெயொழுகும்
மெழுகு மேனியெங்கும் 
   முத்து முத்தாய் வேர்வையொழுகும் . . . 

சில்லுக்கோடு கோடு போட்டு 
  சில்லு ரெண்டு தேடி எடுத்து - குதிச்சி 
நீ சில்லாடயிலே  - குதி 
   கால் படத்தான் சில்லும் ஏங்கும் . . . 

கல்கோனா ஒன்னு வாங்கி
    கடவாயில ஊறவச்சி - மொதிச்சி 
வருகையிலே கடிச்சி நீயும் 
   பங்கு வைக்க . . . 

மூணு பங்கு வந்துச்சுன்னு  - அதுல 
    ரெண்டு எனக்கு நீட்ட  
ஒன்ன மட்டும் நான் எடுத்து  - உன் 
    எச்சிலோடு கலந்து திங்க 
நெனச்சா மூச்சு நிக்குதடி - தொண்டை 
       குழியும் இப்போ விக்குதடி . . . 

பருவம் வந்து சேரவில்லை - அப்போ 
  பக்குவமும் நமக்கு இல்லை 
பாழா போன மனசு ரெண்டும் 
  பாலா தேனா கலந்து போச்சே . . . 

பருவம் வந்து உன்ன சேர - பளிங்கு 
  கல்லா உருவம் மாற 
கூட்டுக்குள்ளே நீ போகையிலே  -  என் 
  கூடு தனியே ஏங்கியதே !

பத்து நாளோ பாஞ்சி நாளோ - உயிர்  
  பட்ட பாட்டை என்ன சொல்ல 
ஒத்தை பனை என் ஓலத்தை சொல்லும்,
   காட்டு கேணி என் கவலைய சொல்லும்  . . . 

சடங்கு முடிஞ்சி, சந்தனம் பூசி 
   பட்டுத்தி, பாவாடை கட்டி  
குனிஞ்ச தல நிமிர்தயில -  உன் 
   குவளை முகம் பார்த்திருந்தா. . . . . 

கல்லுக்கும் காதல் வரும் 
   முள்ளுக்கும் மோகம் வரும்

                                  --- தொடரும் இக்காதல் II - ஆம் பாகத்தில்

No comments: