Thursday, November 21, 2019

விடை காணா வினாக்கள் . . .


அடித்தது வலிக்கவில்லயாயினும் - அம்மா 
       அடித்தால் அழுகை வருவதெப்படி ?

கடித்ததில் எச்சில் இருந்தும் - அக்கா 
    கண்டுக்காமல் வாங்கி தின்பதெப்படி ?
     
மிதித்தது பெரிய கோழியாயினும் - குஞ்சு 
      மிரளாமல் அங்கேயே சுற்றுவதெப்படி ?

உழைப்பவன் உழைத்து ஓடாய் தேய - ஒன்றுமறியா  
       ஊதாரிக்கு அதிர்ஷ்டம் அடிப்பதெப்படி ?

காதல் பிறந்ததும் காதலர் யாவரும் - திடீர் 
    கவிஞராய் மாறுவது எப்படி ?

பட்ட காலிலே மறுபடியும் - காயம் 
         பட்டு பட்டு ஆருவதெப்படி?

கெட்ட குடிகளே எப்பொழுதும் - ஊரில் 
       கெட்டு ஒழிவதுவும் எப்படி ?

கைப்பிடி தந்த மரத்தையே கோடாரி - வேரோடு  
    சாய்க்க முயல்வது எப்படி ?

நாள் முழுதும் உழைத்திட்ட ஒருவன்
    நாணலில் கவலையின்றி உறங்குவதெப்படி ?
     
கண் மயங்கி தூங்கியும் பேருந்தில் - ஊர் 
     காணாமலே கண் முழிப்பதெப்படி ?         

உதவ முடிந்த சக்தி  இருந்தும் - சொந்தம் 
      கதவை மூடும் கண்ணியம் எப்படி ?

ஊர், பேர், இனம் அறியா நட்பு  - உயிரில் 
    இரண்டற கலந்து வளருதே எப்படி ?

முறை மாமன் சொந்தமிருக்க - காதல் 
     முரணான சாதிப்பையனோடு வருவதெப்படி?

சில நாள் பழகி சிறகொடிந்த காதலுக்கு - விலையற்ற 
      உயிர் கொடுக்க துணிவதெப்படி  ?

வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே - சொன்னவள் 
      எவனோ ஒருவனோடு, மகிழ்ச்சியாய் எப்படி ?

மணமுடிந்த பத்தாம் மாதத்தில் - மழலை 
  ஒன்றை அவள் பெறுவதுவும் எப்படி ? 

போகிற போக்கில் அவள் பார்வையில்பட்டால் 
    விழிநீர் பொங்கி வழிவதுவும் எப்படி ?
  
பதினாறு பொருத்தமும் பொருந்தியும் - சிலருள் 
    வாழ்க்கை பொருந்தா இரகசியம் எப்படி ?

படிப்பும் அறிவும் மிகுதியாய் இருக்க - பணம் 
    படைதவர்கிடையே மட்டும் மணவிலக்கெப்படி ?

எந்த குற்றமும் அறியா பிஞ்சுகள் - சிறு சுற்றமும்  
   இன்றி அனாதையாய் எப்படி ?

தோளில் மார்பில் தாங்கிய பிள்ளைகள் - பெற்றோரை   
    நடுவில் தொலைப்பது  எப்படி ?

போவது சொர்கமே உறுதியாயினும்  - உயிர் 
     போக மறுக்கும் அச்சம் எப்படி ?

இன்னும் விடை காணா வினாக்கள் பல இருந்தும் -  கவிதை 
      கண் மூட முடிந்தது எப்படி ?